Lesson 12

கிறிஸ்துவின் வருகைக்குப்பின் நம்பக் கடினமான ஆயிரம் வருட காலம் ஆரம்பிக்கப்போகிறது என்பதைக்குறித்து நீங்கள் நிச்சயமாயிருக்கலாம். ஆம் அது வரவிருக்கிறது. தன்னுடைய ஆயிரம் வருட சிறைவாசத்தைக்குறித்து நீங்கள் அறிந்துகொள்ளுவதை பிசாசு விரும்பவில்லை. ஏனெனில் அது அவனுடைய உண்மையான குணத்தை வெளிப்படுத்துகிறது. உண்மையில் உங்களை ஏமாற்றும்படியாக சாத்தான் போலியான ஒரு செய்தியை இட்டுக்கட்டியிருக்கிறான். நீங்கள் இதுவரையிலும் அறிந்திருக்கிற அனைத்தையும் முழுவதுமாக அசைக்கக்கூடிய அற்புதமான அச்சமூட்டுகிற ஒரு பாடம் இது. ஆயிரம் வருட ஆட்சியைக் குறித்த வேதாகமத்தின் ஆச்சரியமான உண்மைகளை இப்போது பார்க்கலாம்.
1. ஆயிரம் வருட காலத்தை என்ன சம்பவம் துவக்குகிறது?
“அவர்கள் உயிர்த்துக் கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள்” - வெளிப்படுத்தல் 20:4. (மரணத்தைக்குறித்த அதிக வெளிப்பாட்டிற்கு பாடம் 10ஐ பார்க்கவும்.)
பதில்: ஆயிரம் வருட அரசாட்சியை ஒரு உயிர்த்தெழுதல் துவக்குகிறது.
2. இந்த உயிர்த்தெழுதலின் பெயரென்ன? இதில் யார் எழுப்பப்படுவார்கள்?
“இதுவே முதலாம் உயிர்த்தெழுதல். முதலாம் உயிர்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்” - வெளிப்படுத்தல் 20:5,6.
பதில்: இது முதலாம் உயிர்த்தெழுதல் என்று அழைக்கப்படுகிறது. காலங்கள் நெடுகிலும் மரித்த பரிசுத்த நீதிமான்கள் இதில் எழுப்பப்படுவார்கள்.

3. இரண்டு உயிர்தெழுதல்கள் உண்டென்று வேதாகமம் சொல்லுகிறதே, இரண்டாம் உயிர்த்தெழுதல் எப்போது? யார் எழுப்பப்படுவார்கள்? “மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை” - வெளி. 20:5; “பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங்காலம் வரும்; அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்” - யோவான் 5:28,29.
பதில்: இரண்டாவது உயிர்த்தெழுதல் ஆயிரம் வருட காலத்தின் முடிவில் நடக்கிறது. இதில் துன்மார்க்கர் எழுப்பப்படுவார்கள். இது அழிவிற்கான உயிர்த்தெழுதல் என்று அழைக்கப்படுகிறது.
குறிப்பு: நீதிமான்களின் உயிர்தெழுதல் ஆயிரம் வருட காலத்தை துவக்குகிறது; துன்மார்க்கரின் உயிர்த்தெழுதல் ஆயிரம் வருட காலத்தை முடிக்கிறது.

4.1. ஆயிரம் வருடம் ஆரம்பிக்கும்போது இன்னும் வேறு என்ன குறிப்பான சம்பவங்கள் நடைபெறுகின்றன?
“இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும்” - வெளி. 1:7; “கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு,” - 1 தெச. 4:16.17; “பூமி மிகவும் அதிர்ந்தது, பூமியின்மேல் மனுஷர்கள் உண்டான நாள்முதற்கொண்டு அப்படிப்பட்ட பெரிய அதிர்ச்சியுண்டானதில்லை,” தீவுகள் யாவும் அகன்றுபோயின; பர்வதங்கள் காணப்படாமற்போயின. தாலந்து நிறையான பெரிய கல்மழையும் வானத்திலிருந்து மனுஷர்மேல் விழுந்தது;” (58-100 பவுண்டுகள் இருக்கும் என்று அறிஞர்கள் கணக்கிடுகிறார்கள்) - வெளி. 16:18,20,21. (ஏரே. 4:23-26; ஏசாயா 24:1,3,19,20; 2:21 -ஐயும் பார்க்கவும்)
பதில்: ஆயிரம் வருஷம் துவங்கும்போது நடக்கவிருக்கிற முக்கியமான சம்பவங்கள்: சரித்திரத்திலே மிகவும் பேரழிவை உண்டாக்கும் பூமியதிர்ச்சியும் கல்மழையும் பூமியைத் தாக்குகின்றன. இயேசு தமது மக்களுக்காக மேகங்கள்மேல் திரும்பி வருகிறார். பரிசுத்தவான்கள் அனைவரும் இயேசுவை மேகங்கள்மேல் சந்திக்கும்படியாக ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள். (இரண்டாம் வருகையைக் குறித்த அதிக போதனைகளை பாடம் 8ல் பார்க்கவும்).

5.
1. இயேசுவின் இரண்டாம் வருகையில் உயிரோடு இருக்கிற மற்றும் மரித்த துன்மார்க்கருக்கு என்ன சம்பவிக்கும்?
“தமது வாயின் சுவாசத்தால் துன்மார்க்கரைச் சங்கரிப்பார்” - ஏசாயா 11:4; “தேவனை அறியாதவர்களும் … நீதியுள்ள ஆக்கினையைச் செலுத்தும்படிக்கு, கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடும், ஜூவாலித்து எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படும்போது அப்படியாகும்” - 2 தெச. 1:7.8; “துன்மார்க்கர் தேவனுக்குமுன் அழிவார்கள்” - சங்கீதம் 68:2; “மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரும் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை” - வெளிப்படுத்தல் 20:5.
பதில்: உயிரோடிருக்கிற துன்மார்க்கர் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் அவருடைய சமூகத்தினால் கொல்லப்படுவார்கள். இயேசுவின் கல்லறையில் ஒரு தூதன் காணப்பட்டபோது, ரோம காவலாளிகள் அனைவரும் மரித்தவர்களைப்போல கீழே விழுந்தார்கள் (மத்தேயு 28:2,4). அனைத்து தூதர்களின் பிரகாசமும், பிதாவாகிய தேவனுடைய மற்றும் அவருடைய குமாரனின் பிரகாசமும் இணையும்போது, மின்னலால் தாக்கப்பட்டதைப்போல துன்மார்க்கர் மரித்துப்போவார்கள். ஏற்கனவே மரணமடைந்த துன்மார்க்கர் ஆயிரம் வருஷம் முடியும் வரையிலும் கல்லறையிலேயே இருப்பார்கள்.
6.
1. இந்த ஆயிரம் வருட காலத்தில் இராட்சிக்கப்படாத மக்கள் மனந்திரும்புவதற்கான ஒரு சந்தர்ப்பத்தைப் பெற்றுக்கொள்வார்கள் என்று அநேகர் நம்புகிறார்களே, இதைக்குறித்து வேதாமம் என்ன சொல்லுகிறது?
“அக்காலத்திலே பூமியின் ஒரு முனை துவக்கிப் பூமியின் மறுமுனைமட்டும் கர்த்தரால் கொலையுண்டவர்கள் கிடப்பார்கள்; அவர்கள் புலம்பப்படாமலும் சேர்க்கப்படாமலும் அடக்கம்பண்ணப்படாமலும் பூமியின்மேல் எருவாவார்கள்.” “பின்னும் நான் பார்க்கும்போது, மனுஷனில்லை; ஆகாசத்துப் பறவைகளெல்லாம் பறந்துபோயின” - எரேமியா 25:33; 4:25.

பதில்: இந்த ஆயிரம் வருட காலத்தில் ஒரு நபர்கூட பூமியில் உயிரோடு இருக்கமாட்டார் என்பதினால், எந்த மனிதரும் மனந்திரும்புவது நடக்கக்கூடாத காரிம். நீதிமான்கள் அனைவரும் பரலோகத்தில் இருப்பார்கள். துன்மார்க்கர் அனைவரும் பூமியில் மரித்திருப்பார்கள். இயேசு திரும்பி வருவதற்கு முன்பாக ஒவ்வொரு நபருடைய வாழ்க்கையும் தீர்மானிக்கப்படுகிறது என்று வெளிப்படுத்தல் 22:11,12 தெளிவாக அறிவிக்கிறது. ஆயிரும் வருஷம் துவங்கும்வரையிலும் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள காத்திருக்கிறவர்கள் மிக நீண்ட காலம் காத்துவிட்டார்கள்.
7.
1. சாத்தான் இந்த ஆயிரம் வருட காலத்தில் பாதாளத்தில் அடைக்கப்படுவான் என்று வேதாகமம் சொல்லுகிறதே, இது எந்த பாதாளம்?
“ஒரு தூதன் பாதாளத்தின் திறவுகோலையும் பெரிய சங்கிலியையும் தன்கையில் பிடித்துக்கொண்டு வானத்திலிருந்திறங்கி வரக்கண்டேன். பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவுங் கட்டிவைத்து … அதைப் பாதாளத்திலே தள்ளியடைத்து,” - வெளி. 20:1-3.
பதில்: பாதாளம் என்கிற வார்த்தையினுடைய கிரேக்க மூலபதம் “அபுசஸ்” என்பதாகும். இதே வார்த்தை பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழியில் ஆதியாகமம் 1:2 ல் “பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது” என்று, இந்த பூமியின் சிருஷ்டிப்போடு தொடர்புபடுத்தி சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அங்கே இந்த வார்த்தை “ஆழம்” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. எவ்வளவு ஆச்சரியம்! ஆழம், பாதாளம், அபுசஸ் இவை அனைத்தும் ஒரே காரியத்தை-தேவன் ஒழுங்குபடுத்தும் முன்பாக இருந்த இந்த பூமியின் இருண்ட ஒழுங்கற்ற நிலையையே குறிப்பிடுகின்றன. ஆயிரம் வருட காலத்தில் இந்த பூமியின் நிலையை விவரிக்க ஆதியாகமம் உபயோகிக்கிற அதே வார்த்தைகளை எரேமியா எடுத்துக்கொள்கிறார். “ஒழுங்கின்மையும் வெறுமையுமாயிருந்தது,” “ஒளியில்லாதிருந்தது,” “மனுஷனில்லை,” “கறுத்துப்போம்” - எரேமியா 4:23,25,28. எனவே, நொறுக்கப்பட்டு, இருண்டு, உயிருள்ள மனிதர்கள் இல்லாத பூமியே பாதாளம் என்றோ அல்லது அபிஸ் என்றோ அழைக்கப்படும். சிருஷ்டிப்பு முடிவடைவதற்குமுன்பு இருந்ததைப்போன்றே ஆயிரம் வருட காலத்தில் அது இருக்கும். ஆயிரம் வருட காலத்தில் சாத்தானும் அவனுடைய தூதர்களும் “கெபியில் ஏகமாய்க் கட்டுண்டவர்களாகச் சேர்த்து, காவலில் அடைக்கப்பட்டு,“ என்று ஏசாயா 24:22 ல் பேசுகிறார்.

8.1. சாத்தனைக் கட்டுகிற சங்கிலி எது? அவன் ஏன் கட்டப்படுகிறான்?
“ஒரு தூதன் பாதாளத்தின் திறவுகோலையும் பெரிய சங்கிலியையும் தன்கையிலே பிடித்துக்கொண்டு வானத்திலிருந்திறங்கிவரக்கண்டேன். பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளகூங் கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும்வரைக்கும் அது ஜனங்களை மோசம்போக்காதபடிக்கு அதைப் பாதாளத்திலே தள்ளியடைத்து, அதின்மேல் முத்திரைபோட்டான்” - வெளிப்படுத்தல் 20:1-3.

பதில்: சங்கிலி என்பது சூழ்நிலைகளை குறிக்கும் அடையாளமான ஒரு வார்த்தை. ஒரு ஆவி உண்மையான சங்கிலியோடு கட்டப்படமுடியாது. மோசம்போக்க சாத்தனுக்கு ஒருவனும் இல்லாதபடியினாலே அவன் கட்டப்பட்டிருக்கிறான். துன்மார்க்கர் அனைவரும் மரித்திருக்க, நீதிமான்கள் அனைவரும் பரலோகத்திலிருப்பார்கள். தேவன் சாத்தனை இந்த அண்ட சராசரமுழுவதிலும் அலையும்படி அனுமதிக்காமல், இந்த பூமியில்தானே இருத்துகிறார். வஞ்சிக்கிறதற்கு எந்த மனிதனும் இல்லாத நிலையில் ஆயிரம் வருடங்கள் இந்த பூமியிலேயே தங்கியிருக்கும்படி பிசாசும் அவனுடைய தூதரும் நிர்பந்திக்கப்படுவதுதான் மன உளைச்சலைத் தரும் சங்கிலியாக, இருக்கமுடியும்.
ஆயிரம் வருடகால துவக்க சம்பவங்களைத் திருப்பிப்பார்ப்போம்
1) பேரழிவை உண்டாக்கும் கல்மழையும் பூமியதிர்ச்சியும் (வெளி. 16:18-21; 6:14-17).
2) தமது பரிசுத்தவான்களுக்கான இயேசுவின் இரண்டாம் வருகை (மத்தேயு 24:30,31).
3) மரித்த நீதிமான்கள் உயிரோடு எழுப்பப்படுகிறார்கள் (1 தெச. 4:16,17)
4) நீதிமான்களுக்கு அழியாமை கொடுக்கப்படுகிறது. (1 கொரி. 15:51-55).
5) இயேசுவைப்போன்ற சரீரங்களும் கொடுக்கப்படுகிறது (1 யோவான் 3:2; பிலி. 3:21).
6) நீதிமான்களனைவரும் மேகங்கள்மேல் எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள் (1 தெச. 4:16,17).
7) உயிரோடிருந்த துன்மார்க்கர் தேவனுடைய நாசியின் சுவாசக் காற்றினால் அழிக்கப்படுகிறார்கள் (ஏசாயா 11:4).
8) ஆயிரம் வருடமளவும் துன்மார்க்கர் கல்லறைகளிலேயே இருக்கிறார்கள் (வெளி. 20:5).
9) இயேசு நீதிமான்களை பரலோகத்திற்கு எடுத்துச் செல்கிறார் (யோவான் 13:33,36; 14:1-3).
10) சாத்தான் கட்டப்படுகிறான் (வெளிப்படுத்தல் 20:1-3).

9.1. ஆயிரம் வருட காலத்தில் பரலோகத்தில் ஒரு நியாயத்தீர்ப்பு நடக்கும் என்று வெளிப்படுத்தல் 20:4 சொல்லுகிறதே. அது எதற்காக? அதில் யார் பங்கெடுப்பார்கள்?
“அன்றியும், நான் சிங்காசனங்களைக் கண்டேன்; அவைகளின்மேல் உட்கார்ந்தார்கள்; நியாயத்தீர்ப்புக் கொடுக்கும்படி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது … அவர்கள் உயிர்த்துக் கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள்” - வெளிப்படுத்தல் 20:4; “பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயந்தீர்ப்பார்களென்று அறியீர்களா? உலகம் உங்களால் நியாயந்தீர்க்கப்படுவதாயிருக்க, அற்ப வழக்குகளைத் தீர்க்க நீங்கள் அபாத்திரரா? தேவ தூதர்களையும் நியாயந்தீர்ப்போமென்று அளியீர்களா? அப்படியிருக்க, இந்த ஜீவனுக்கேற்றவைகளை நீங்கள் தீர்த்துக்கொள்ளாக்கூடாதிருக்கிறது எப்படி” - 1 கொரிந்தியர் 6:2,3.
பதில்: அனைத்து யுகங்களிலும் வாழ்ந்த நீதிமான்கள் (ஒருவேளை நல்ல தூதர்களுங்கூட இருக்கலாம்) இந்த ஆயிரம் வருட காலத்தில் நியாயத்தீர்ப்பில் பங்கெடுக்கிறார்கள். பிசாசு மற்றம் அவனுடைய தூதர்களின் வாழ்க்கை உட்பட இரட்சிப்பை இழந்துபோன அனைவருடைய வாழ்க்கையும் திருப்பிப்பார்க்கப்படும். இரட்சிக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனுக்கும் இரட்சிப்பை இழந்தவர்களைக்குறித்த காரியங்கள் தெளிவாக்கப்படும். முடிவில், இயேசுவைப்போல வாழவோ அல்லது இயேசுவோடு வாழவோ விரும்பாத காரணத்தினாலேயே அவர்கள் பரலோகத்தைவிட்டு வெளியே அடைக்கப்பட்டார்கள் என்பதை அனைவரும் பார்ப்பார்கள்.
ஆயிரம் வருட காலத்தில் நடக்கும் சம்பவங்களை திருப்பிப்பார்ப்போம்
1) மிகப்பெரிய கல்மழையினாலும் பேரழிவை உண்டாக்கின பூமியதிர்ச்சியினாலும் பூமி நொறுக்கப்பட்டு சேதமடைந்திருக்கிறது (வெளிப்படுத்தல் 16:18-21; 6:14-17).
2) பூமி இருண்டுபோயிருக்கிறது அல்லது பாதாளம் போலிருக்கிறது (எரேமியா 4:23,28)
3) சாத்தானும் அவனுடைய தூதர்களும் இந்த பூமியிலே தங்கியிருக்க கட்டாயப்படுத்த படுகிறார்கள் அல்லது கட்டப்பட்டிருக்கிறார்கள் (வெளிப்படுத்தல் 20:1-3).
4) பரலோகத்திலிருக்கிற நீதிமான்கள் நியாயத்தீர்ப்பில் பங்கெடுக்கிறார்கள் (வெளிப்படுத்தல் 20:4)
5) துன்மார்க்கர் அனைவரும் மரித்திருக்கிறார்கள் (ஏரேமியா 4:25; எசாயா 11:4).
ஆயிரம் வருட காலத்தில் இந்த பூமியில் வசித்திருந்த அனைவரும் ஒன்று இந்த பூமியில் மரித்தவர்களாக இருப்பார்கள் அல்லது பரலோகத்தில் நியாயத்தீர்ப்பில் பங்கெடுத்துக்கொண்டிருப்பார்கள். நீங்கள் பரலோகத்தில் இருக்கவேண்டுமென்று ஆண்டவர் அழைக்கிறார். அவருடைய அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்.

10.1. ஆயிரம் வருடம் முடியும்போது பரிசுத்த நகரமாகிய புதிய எருசலேம் பரலோகத்திலிருந்து பூமிக்கு இறங்கி வருகிறது. அதோடு யார் வருவார்கள்? அது எங்கே நிலைநிறுத்தப்படும்?
“யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தைத் தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கி வரக்கண்டேன்; … “மேலும் பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது” - வெளிப்படுத்தல் 21:2,3; “இதோ, கர்த்தருடைய நாள் வருகிறது,” “அந்நாளிலே அவருடைய பாதங்கள் கிழக்கே எருசலேமுக்கு எதிரே இருக்கிற ஒலிவமலையின்மேல் நிற்கும்; அப்பொழுது மகா பெரிய பள்ளத்தாக்கு உண்டாகும்படி ஒலிவமலை தன்நடுமையத்திலே கிழக்கு மேற்காய் எதிராகப் பிளந்துபோம்; அதினாலே, ஒரு பாதி வடபக்கத்திலும் ஒரு பாதி தென்பக்கத்திலும் சாயும் … என் தேவனாகிய கர்த்தர் வருவார்; தேவரீரோடே எல்லாப் பரிசுத்தவான்களும் வருவார்கள்.” “தேசமெல்லாம் கேபாதொடங்கி எருசலேமுக்குத் தெற்கே இருக்கிற ரிம்மோன்வரைக்கும் சமபூமியாகத் திருத்தப்படும்” - சகரியா 14:1,4,5,10.
பதில்: புதிய எருசலேம் இப்போது ஒலிவ மலை இருக்கும் இடத்தில் ஸ்தாபிக்கப்படும். அந்த மலை பெரிய சமபூமியாக்கப்பட, அதன்மேல் இந்த பரிசுத்தப் பட்டணம் தங்கும். அனைத்து யுகத்திலும் வாழ்ந்த நீதிமான்கள் அனைவரும் (சகரியா 14:5), அனைத்து தூதர்களும் (மத்தேயு 25:31), பிதாவாகிய தேவனோடும் (வெளிப்படுத்தல் 21:2,3), குமாரனாகிய தேவனோடும் (மத்தேயு 25:31) இயேசுவின் விசேஷத்த மூன்றாம் வருகையில் பரிசுத்த நகரத்தோடுங்கூட பூமிக்குத் திரும்புவார்கள். இரண்டாம் வருகை அவருடைய பரிசுத்தவான்களுக்காக. மூன்றாம் வருகை அவருடைய பரிசுத்தவான்களோடுகூட.
இயேசுவின் மூன்று வருகைகள்:
![]() முதல் வருகை: பெத்லகேமின் தொழுவத்தில். |
![]() இரண்டாம் வருகை:ஆயிரம் வருட கால துவக்கத்தில் அவருடைய பிள்ளைகளை பரலோகத்திற்கு எடுத்துச்செல்லும்படி மேகங்கள்மீது. |
![]() மூன்றாவது வருகை:ஆயிரம் வருட முடிவில் பரிசுத்த பட்டணத்தோடு அனைத்து நீதிமான்களோடும். |
11. அந்த நேரத்தில் மரித்த துன்மார்க்கருக்கு என்ன சம்பவிக்கும்? இது எவ்விதம் சாத்தனை பாதிக்கும்?
“மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை.” “அந்த ஆயிரம் வருஷம் முடியும்போது சாத்தான் தன் காவலிலிருந்து விடுதலையாகி, பூமியின் நான்கு திசைகளிலுமுள்ள ஜாதிகளாகிய … மோசம்போக்கும்படிக்கும் … புறப்படுவான்” - வெளி. 20:5,7,8.
பதில்: ஆயிரம் வருடத்தின் முடிவில் (இயேசு மூன்றாம் முறை வரும்போது) துன்மார்க்கர் எழுப்பப்படுவார்கள். சாத்தான் அவன் கட்டுகளிலிருந்து விடுபடுவான். வஞ்சிக்கும்படியாக பூமி மக்களால் (அனைத்து ஜாதிகளாலும்) முழுவதும் நிறைந்திருக்கும்.
12. அப்போது சாத்தான் என்ன செய்வான்?
“சாத்தான் … பூமியின் நான்கு திசைகளிலுமுள்ள ஜாதிகளாகிய … மோசம்போக்கும்படிக்கும், அவர்களை யுத்தத்திற்குக் கூட்டிக்கொள்ளும்படிக்கும் புறப்படுவான். அவர்களுடைய தொகை கடற்கரை மணலத்தனையாயிருக்கும். அவர்கள் பூமியெங்கும் பரம்பி, பரிசுத்தவான்களுடைய பாளையத்தையும், பிரியமான நகரத்தையும் வளைந்துகொண்டார்கள்” - வெளிப்படுத்தல் 20:7-9.
பதில்: சாத்தான் அவனுடைய உண்மையான குணத்திற்கேற்ப பூமியில் விடுபட்ட மக்களிடம்-அனைத்து யுகத்திலும் வாழ்ந்த துன்மார்க்கரிடம் உடனடியாக பொய்சொல்ல ஆரம்பிப்பான். அந்த பட்டணம் தன்னுடையதென்றும், பரலோக இராஜ்யத்திலிருந்து தான் அநியாயமாக தள்ளப்பட்டுவிட்டதாகவும், தேவன் அதிகார வெறியோடு இரக்கமற்று இருப்பதாகவும், பேரழிவை உண்டாக்கும் தப்பிக்கக்கூடாத அக்கினியினால் அவர்கள் அனைவரையும் அழிக்க ஆயத்தமாக இருப்பதாகவும் ஒருவேளை சொல்லக்கூடும். நாம் ஒன்றுபட்டால் தேவனுக்கு வேறு வழியே இருக்காது என்று அவன் அவர்களை நம்பவைக்கலாம். அந்த ஒரு பட்டணத்திற்கு எதிராக முழு உலகமும் நிற்க, வெற்றி நிச்சயம் என்பதுபோலக் காணப்படும். பின்னர் அனைத்து ஜனமும் ஒன்றிணைந்து புதிய எருசலேமை வளைந்துகொள்ளும். (சாத்தனைக்குறித்த அதிக விளக்கத்திற்கு பாடம் 2ஜ படிக்கவும்).

13.1. பட்டணத்தை பிடித்து அழிக்கும் சாத்தனுடைய திட்டத்தை என்ன சம்பவம் தடுக்கும்?
“தேவனால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களைப் பட்சித்துப்போட்டது. மேலும் அவர்களை மோசம்போக்கின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான்”- வெளி. 20:9,10; 21:8; “நான் இதைச் செய்யும்நாளிலே அவர்கள் உங்கள் உள்ளங்கால்களின்கீழ் சாம்பலாயிருப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்” - மல்கியா 4:3.
பதில்: வானத்திலிருந்து சடிதியாக அக்கினி இறங்கும். (இன்று அநேகர் நம்புவதைப்போல பாதாளத்திலிருந்து அக்கினி ஏறி வராது). பிசாசும் அவனுடைய தூதர்களும் உட்பட (மத்தேயு 25:41) அனைவரும் சாம்பலாவார்கள். பாவத்தையும் பாவிகளையும் அழிக்கிற இந்த அக்கினி இரண்டாவது மரணம் எனப்படும். இந்த மரணத்திலிருந்து உயிர்த்தெழுதல் இல்லை. இது முடிவு. இன்று பொதுவாக நம்பப்படுவதைப்போல பிசாசு அக்கினியை கொளுத்தவில்லை என்பதை கவனியுங்கள். அவனும் அதில் இருப்பான். அது அவனை இல்லாமற்போகச்செய்யும். (பாதாளம் எனப்படும் இந்த அக்கினியைக் குறித்த விளக்கத்திற்கு பாடம் 11ஜயும், மரணத்தைக்குறித்த விளக்கத்திற்கு பாடம் 10யும் பார்க்கவும்).

14.1. துன்மார்க்கர் எரிக்கப்பட்டு, அக்கினி அணைந்தபிறகு அடுத்ததாக என்ன மகிமையான சிலிர்ப்பூட்டுகிற சம்பவம் நடக்கும்?
“இதோ, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்” - ஏசாயா 65:17; “நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்” - 2 பேதுரு 3:13; “சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாக்கிறேன் என்றார்.” “இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார்” - வெளிப்படுத்தல் 21:5,3.
பதில்: தேவன் புதிய வானங்களையும் புதிய பூமியையும் உண்டாக்குவார். புதிய எருசலேம் புதிதாக்கப்பட்ட பூமியின் தலைநகரமாயிருக்கும். பாவமும் அதன் அனைத்து அருவருப்புகளும் என்றென்றைக்குமாக கடந்துபோயிருக்கும். தேவனுடைய மக்கள் அவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட இராஜ்யத்தை முடிவாக பெற்றுக் கொள்ளுகிறார்கள். “சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஒடிப்போம்” - ஏசாயா 35:10. விவரிப்பதற்கு மிகவும் அற்புதமானது; இழந்துபோகக்கூடாதளவு மிக மேன்மையானது; நிச்சயமின்றி இருக்கக்கூடாதபடி அது மிக அருகிலிருக்கிறது. உங்களுக்காக தேவன் ஒரு இடத்தை ஆயத்தம் செய்திருக்கிறார் (யோவான் 14:1-3). அதில் பிழைத்திருக்க தீர்மானியுங்கள்.. உங்களுடைய சம்மதத்திற்காக இயேசு காத்திருக்கிறார். (பரலோகம்பற்றின விளக்கத்திற்கு பாடம் 4ஜ படியுங்கள்).

ஆயிர வருட முடிவில் நடக்கும் சம்பவங்கள்
1) இயேசு தமது பரிசுத்தவான்களோடுகூட மூன்றாம் முறை வருகிறார் (சகரியா 14:5).
2) பரிசுத்த நகரம் மிகப் பெரிய சம பூமியான ஒலிவ மலையின்மீது தங்குகிறது (சகரியா 14:4,10).
3) பிதாவானவரும் தூதர்களும் அனைத்து நீதிமான்களும் இயேசுவோடு வருகிறார்கள் (வெளிப்படுத்தல் 21:1-3; மத்தேயு 25:31; சகரியா 14:5)
4) மரித்த துன்மார்க்கர் உயிரோடு எழும்புகிறார்கள். சாத்தான் கட்டவிழ்க்கப்படுகிறான் (வெளிப்படுத்தல் 20:5,7)
5) சாத்தான் முழு உலகத்தையும் வஞ்சிக்கிறான் (வெளிப்படுத்தல் 20:8)
6) துன்மார்க்கர் பரிசுத்த நகரத்தை வளைந்துகொள்ளுகிறார்கள். (வெளிப்படுத்தல் 20:9)
7) துன்மார்க்கர் அக்கினியால் அழிக்கப்படுகிறார்கள் (வெளிப்படுத்தல் 20:9)
8) புதிய வானங்களும் புதிய பூமியும் சிருஷ்டிக்கப்படுகின்றன (ஏசாயா 65:17; 2 பேதுரு 3:13; வெளிப்படுத்தல் 21:1)
9) தேவனுடைய மக்கள் புதிய பூமியில் கிறிஸ்துவோடுகூட நித்தியத்தை அனுபவிக்கிறார்கள் (வெளிப்படுத்தல் 21:2-4)

“அப்படியே இவைகளையெல்லாம் நீங்கள் காணும்போது, அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள்” - மத்தேயு 24:33; “இவைகள் சம்பவிக்கத் தொடங்கும்போது, உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், நீங்கள் நிமிர்ந்துபார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள் என்றார்” - லூக்கா 21:28; “அவர் நீதியோடே சீக்கிரமாய்த் தம்முடைய காரியத்தை நிறைவேற்றுவார்; கர்த்தர் பூமியிலே சீக்கிரமாகவே காரியத்தை நிறைவேற்றி முடிப்பார்” - ரோமர் 9:28; “சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல, அழிவு சடிதியாய் அவர்கள்மேல் வரும்; அவர்கள் தப்பிப்போவதில்லை.” - 1 தெசலோனிக்கேயர் 5:3.
பதில்: இன்று இருப்பதைப்போல, அவருடைய வருகைக்கான அடையாளங்கள் வேகமாக நிறைவேறுவதை நாம் காணும்போது அவருடைய வருகை அதிசீக்கிரத்தில் இருக்கிறது என்றும், அவர் வாசலருகே வந்துவிட்டதாகவும் களிகூரவேண்டுமென்று இயேசு கூறினார். சமாதானத்திற்கான ஒரு முயற்சி உலகம் முழுவதிலும் எடுக்கப்படும். அந்த இயக்கம் நடக்கும்போது முடிவு சமீபமாயிருக்கும் என்று பவுலார் கூறினார். தேவன்தாமே வேலையை விரைவில் முடிப்பார் என்று வேதாகமம் தானே முடிவாகக் கூறுகிறது (ரோமர் 9:28). எனவே சந்தேகத்திற்கிடமின்றி நாம் கடனாகக் கொடுக்கப்பட்டிருக்கிற காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். தேவனைத்தவிர வேறு எவரும் அறிந்திராத நேரத்தில் ஆண்டவர் சடிதியாகவும் எதிர்பாராதவிதமாகவும் வருவார் (மத்தேயு 24:36, அப்போஸ்தலர் 1:7). நமக்கிருக்கிற ஒரே பாதுகாப்பு ஆயத்தமாக இருப்பதுதான்.

சிந்தனைக் கேள்விகள்
1.
1. பரிசுத்த நகரம் இறங்குவதிலிருந்து, துன்மார்க்கர் வானத்திலிருந்து இறங்கும் அக்கினியால் அழிக்கப்படும்வரை எவ்வளவு காலம் செல்லும்?
பதில்: அது கொஞ்ச காலமே என்று (வெளிப்படுத்தல் 20:3) வேதாகமம் சொல்லுகிறது. தன்னுடைய திட்டங்களை பின்பற்றும்படி மக்களை நடத்தவும், யுத்தத்திற்கான ஆயுதங்களை செய்யவும் சாத்தானுக்குக் கொஞ்சகாலம் தேவைப்படும். வேதாகமத்தில் மிகச் சரியான காலம் கொடுக்கப்படவில்லை.
2. தேவனுடைய புதிய இராஜ்யத்தில் எந்தவிதமான சரீரங்கள் மக்களுக்கு இருக்கும்?
பதில்: மீட்கப்பட்டவர்கள் இயேசுவைப்போன்ற சரீரங்களைக் பெற்றிருப்பார்கள் என்று வேதாகமம் குறிப்பிடுகிறது (பிலிப்பியர் 3:21). உயிர்தெழுதலுக்குப்பின்பு இயேசு மாமிசமும் எலும்புகளும்கொண்ட மெய்யான சரீரத்தைப் பெற்றிருந்தார் (லூக்கா 24:36-43). மீட்கப்பட்டவர்கள் ஆவிகளாக இருக்கமாட்டார்கள். அவர்கள் ஆதாமையும் ஏவாளையும்போன்று மெய்யான மக்களாக இருப்பார்கள்.
3. இயேசுவின் இரண்டாம் வருகையில் இரட்சிப்பை இழந்துபோனவர்கள் எவ்விதம் நடந்துகொள்வார்களென்று வேதாகமம் சொல்லுகிறதா?
பதில்: ஆமாம். அவர்கள் “பர்வதங்களையும் கன்மலைகளையும் நோக்கி: நீங்கள் எங்கள்மேல் விழுந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்; அவருடைய கோபக்கினையின் மகாநாள் வந்துவிட்டது, யார் நிலைநிற்கக்கூடும் என்பார்கள்” (வெளிப்படுத்தல் 6:16,17) என்று வேதாகமம் சொல்லுகிறது. (வசனம் 14,15-ஜயும் பார்க்கவும்). மறுபுறம் நீதிமான்கள்: இதோ, இவரே நம்முடைய தேவன்; இவருக்காகக் காத்திருந்தோம், இவர் நம்மை இரட்சிப்பார்; இவரே கர்த்தர், இவருக்காகக் காத்திருந்தோம், இவருடைய இரட்சிப்பினால் களிகூர்ந்து மகிழுவோம்” (ஏசாயா 25:9) என்று சொல்லுவார்கள்.
4. பரிசுத்த நகரம் இறங்கும்போது அந்த பட்டணத்திற்குள் இருக்கிற நீதிமான்களை துன்மார்க்கரால் பார்க்கமுடியுமா?
பதில்: பார்க்கத்தான் முடியவேண்டும். இந்த பட்டணம் துளைத்துப் பார்க்கக்கூடியதாக இருக்கும். பளிங்கைப்போன்று தெளிவாக இருக்கும் என்று வேதாகமம் சொல்லுகிறது (வெளிப்படுத்தல் 21:11,18). நீதிமான்கள் துன்மார்க்கரைப் பார்க்கமுடியும் (சங்கீதம் 37:34). அப்படியே துன்மார்க்கர் நீதிமான்களையும் பார்க்கமுடியும் (லூக்கா 13:28). அதாவது மீட்கப்பட்ட குடும்பம் உள்ளேயும் இரட்சிப்பை இழந்துபோனவர்கள் வெளியேயும் இருக்க, மிக சோகமான சந்திப்பு ஒன்று நடக்கும். அதன் விளைவான மன வேதனையும் ஆபத்துகளும் மனித மொழியால் விவரிக்கக்கூடாதவை.
5. தேவன் தமது மக்களின் கண்களிலிருந்து கண்ணீர் யாவையும் துடைப்பார் என்றும், மரணமில்லை, துக்கமில்லை, துயரமில்லை என்றும் வேதாகமம் சொல்லுகிறதே, இவைகள் எப்போது சம்பவிக்கும்?
பதில்: வெளிப்படுத்தல் 21:1-4 மற்றும் ஏசாயா 65:17 லிருந்து, பாவமும் பாவிகளும் அழிக்கப்பட்டபிறகு இது நடக்கும் என்பதுபோலத் தோன்றுகிறது. கடைசி நியாயத்தீர்ப்பிலும் அக்கினியின் அழிவிலும் தேவனுடைய மக்களுக்கு மிக ஆழமான துக்கம் கொள்ளுவதற்கு அநேக காரணங்கள் இருக்கும். நண்பார்களும் உறவினர்களும் இரட்சிப்பை இழந்துபோனார்கள் என்பதையும், தாங்கள் நேசித்திருந்தவர்கள் அக்கினியால் அழிக்கப்பட்டார்கள் என்பதையும் உணரும்போது, அது தேவனுடைய மக்களுக்கு நிச்சயமாக கண்ணீரையும் மன வேதனையையும் கொண்டுவரும். ஆனால் அக்கினி அணையும்போது ஆண்டவர் அவர்களுடைய கண்ணீரையும் துடைத்திருப்பார். அதன்பின்னர் அவர் புதிய வானங்களையும் புதி பூமியையும் தமது மக்களுக்காக உண்டாக்குவார். அது அவர்களுக்கு சொல்லமுடியாத மகிழ்ச்சியையும் நிறைவேறுதலையும் கொண்டுவரும். அப்போது துக்கமும் வருத்தமும் அழுகையும் வேதனையும் என்றென்றுமாகக் கடந்துபோயிருக்கும். (மேலும் தேவ பிள்ளைகளின் பரலோக வீட்டை பற்றி வேதபாடம் 4 ஜ படிக்கவும்).
6. தீய தூதர்கள் மற்றும் துன்மார்க்கருடைய அழிவு பிதாவாகிய தேவனையும் அவருடைய குமாரனையும் எவ்விதம் பாதிக்கும்?
பதில்: பாவம் என்கிற புற்றுநோய் முற்றிலுமாக என்றென்றுமாக கடந்துபோனது என்பதையும், அண்டசராசரமும் பாதுகாப்பாக இருக்கிறது என்பதையும் நினைக்கும்போது சந்தேகத்திற்கிடமின்றி அவர்கள் நிம்மதியடைந்து மிகுந்த மகிழ்ச்சியடைவார்கள். எனினும் தாம் நேசித்திருந்து, எவருக்காக இயேசு மரித்தாரோ அவர்கள் பாவத்தை பிடித்துக்கொண்டு இரட்சிப்பை நிராகரித்தார்கள் என்கிற உண்மை ஆழமான நொறுக்கும் துக்கத்தை அவர்களுக்கு உண்டுபண்ணும். சாத்தான்தானும் ஒருகாலத்தில் அவர்களுடைய அன்பான நண்பனாக இருந்தான். மேலும் அக்கினியில் இருந்தவர்களில் அநேகர், மிக அதிகமாக நேசிக்கப்பட்டிருந்த பிள்ளைகள். தங்களுடைய சொந்த பிள்ளை கொல்லப்படுவதைக் காண்பதுபோன்ற வேதனையாக அந்த வேதனை இருக்கும். பாவம், அது முளைத்ததிலிருந்து பிதாவின்மேலும் குமாரன்மேலும் நசுக்கக்கூடிய பாரமாக இருந்தது. மக்களை நேசித்து அவர்களை இரட்சிப்பிற்குக் கொண்டுவருவதுதான் பிதாவுடைய மற்றும் குமாரனுடைய நோக்கமாயிருந்தது. அவர்களுடைய உணர்வுகள் “எப்பிராயீமே, நான் உன்னை எப்படி கைவிடுவேன்? இஸ்ரவேலே, நான் உன்னை எப்படி ஒப்புக்கொடுப்பேன்? நான் உன்னை எப்படி அத்மாவைப்போலக்குவேன்? உன்னை எப்படிச் செபோயீமைப்போல வைப்பேன்? என் இருதயம் எனக்குள் குழம்பிகிறது; என் பரிதாபங்கள் ஏகமாய்ப் பொங்குகிறது” (ஒசியா 11:8) என்று விவரிக்கப்படுகிறது.
7. இயேசு என்னவிதமான சரீரத்தைக் கொண்டிருக்கிறார்?
பதில்: அவர் மாமிசமும் எலும்புகளும்கொண்ட சரீரத்தைக் கொண்டிருக்கிறார். உயிர்தெழுதலுக்குப்பின் அவர் தமது சீடர்கள்முன் தோன்றி, (லூக்கா 24:36-43) தம்மை தொட்டுப்பார்க்கும்படி கூறியும், அவர்களோடு மீன் மற்றும் தேனை உண்டும், தாம் ஆவியல்ல என்பதையும், தமக்கு மாமிசமும் எலும்புகளும் இருக்கிறதையும் விளக்கிக் காண்பித்தார்.
இயேசு பரமேறுகிறார்
அவர் பின்னர் அவர்களோடு பேசிக்கொண்டே பெத்தானி வரையிலும் சென்றபோது பரலோகத்திற்கு ஏறினார் (லூக்கா 24:49-51). இயேசு ஏறினபிறகு அவர்களுக்குக் காணப்பட்ட தூதர்கள்: “உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார்” (அப்போஸ்தலர் 1:11) என்று விளக்கினார்கள்.
இதே இயேசு திரும்ப வருவார்
அதே இயேசுவானவர் (மாமிசமும் எலும்புகளும் கொண்டவர்) மீண்டும் வருவார் என்பதை தூதர்கள் அழுத்திக்கூறினர். அவர் ஆவியல்ல, மெய்யான சரீரம் கொண்டவர், உயிர்தெழுந்து மறுருபமடையும் பரிசுத்தவான்களும் அவருடையதைப்போன்ற சரீரத்தைப் பெற்றுக்கொள்ளுவார்கள் (பிலிப்பியர் 3:21; 1 யோவான் 3:2). நீதிமான்களுடைய பரலோக சரீரங்களும் அழியக்கூடாததாக அழிவில்லாததாக இருக்கும் (1 கொரிந்தியர் 15:51-55).
கோள்விகள்
1) வெளி. 20ம் அதிகாரத்தின் ஆயிரம் வருட காலத் துவக்கத்தில் சம்பவிப்பவை: (10)
( ) இயேசுவின் இரண்டாம் வருகை.
( ) பூமியதிர்ச்சியும் கல்மழையும்.
( ) மரித்த நீதிமான்கள் எழுப்பப்படுதல்.
( ) சாத்தான் கட்டப்படுதல்.
( ) உயிரோடிருக்கும் துன்மார்க்கர் கொல்லப்படுதல்.
( ) நீதிமான்களுக்கு அழியாமை கொடுக்கப்படுதல்.
( ) பரிசுத்த பட்டணம் இறங்கிவருதல்.
( ) நீதிமான்கள் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுதல்.
( ) கல்லறைகளிலிருக்கும் துன்மார்க்கர் கல்லறைகளிலேயே இருத்தல்.
( ) நீதிமான்களுக்கு இயேசுவைப்போன்ற சரீரம் கொடுக்கப்படுதல்.
( ) மேகங்கள்மேல் இயேசுவை சந்திக்க நீதிமான்கள் எடுத்துக்கொள்ளப்படல்.
( ) இரட்சிக்கப்பட்ட சிலர் பூமியிலேயே விடப்படுவார்கள்.
2) உயிரோடிருக்கும் ஒவ்வொரு நபரும் இயேசுவின் இரண்டாம் வருகையில் அவரைப் பார்ப்பான். (1)
( ) சரி.
( ) தவறு.
3) நீதிமான்கள் பரலோகத்தில் ஆவிகளைப்போன்ற சரீரத்தைப் பெற்றிருப்பார்கள். (1)
( ) சரி.
( ) தவறு.
4) ஆயிரம் வருடம்குறித்த உண்மைகள். (2)
( ) அநேக பாவிகள் மனந்திரும்புவார்கள்.
( ) சாத்தானும் அவனுடைய தூதர்களும் பூமியிலே தங்கும்படி கட்டாயப்படுத்தப்படுவார்கள்.
( ) பார்ப்பதற்கு எந்த தொலைக்காட்சியும் இல்லாததாலே சாத்தான் கட்டப்பட்டிருப்பான்.
( ) ஆயிரம் வருட காலத்தில் பூமியின்மீது மிகுந்த பிரகாசமும் சூரிய வெளிச்சமும் இருக்கும்.
( ) தன்னோடு இருப்பதற்கு சாத்தான் மரித்த துன்மார்க்கரை எழுப்புவான்.
( ) நீதிமான்கள் பரலோகத்தில் நியாயத்தீர்ப்பில் பங்கெடுப்பார்கள்.
5) ஆயிரம் வருட முடிவு சம்பவங்கள்: (4)
( ) கிறிஸ்து ஐந்தாவது முறையாக வருவார்.
( ) பரிசுத்த பட்டணம் வாஷங்டன் டி.சி.க்கு சமீபமாக இருக்கும்.
( ) தூதர்களும் பிதாத்தாமும் இயேசுவோடு வருவார்கள்.
( ) துன்மார்க்கர் எழுப்பப்படுவார்கள்.
( ) இயேசு தமது பரிசுத்தவான்களோடு வருவார்.
( ) துன்மார்க்கரை எழுப்பவேண்டாம் என்று தேவன் தீர்மானிப்பார்.
( ) துன்மார்க்கர் மூர்க்கமான தீய தூதர்களால் அழிக்கப்படுவார்கள்.
( ) தேவன் புதிய வானங்களையும் புதிய பூமியையும் சிருஷ்டிப்பார்.
( ) தேவன் பிரபஞ்சத்திற்கு அப்பால் சாத்தனைத் துரத்திவிடுவார்.
( ) பிசாசு மிகவும் வல்லமையான ஏவுகணைகளைக்கொண்டு பரிசுத்த நகரத்தை அழிப்பான்.
6) சாத்தானைக் கட்டும் சங்கிலி: (3)
( ) அது சூழ்நிலையாகிய சங்கிலியே! அடையாளமானது.
( ) பூமியில் தங்கும்படி அவன் கட்டாயப்படுத்தப்படுவது.
( ) மிகவும் கடினமான புதிய உலோகத்தால் செய்யப்பட்டது.
( ) 24 மணி நேரத்திற்குள் பிசாசால் உடைக்கப்படும்.
( ) பரலோகத்தில் பாதுகாப்பாயிருக்கிற தேவனுடைய பிள்ளைகளை சோதிக்காமல் தடுத்துவைப்பது.
7) பாதாளத்தைக் குறித்த உண்மைகள்: (2)
( ) பூமியிலே மிக ஆழமான ஓட்டை அது.
( ) அதன் பொருள் அபிஸ்.
( ) அது இருண்ட பாழடைந்த ஒழுங்கற்று வெறுமையாயிருக்கிற பூமியை குறிப்பிடுகிறது.
( ) நரகத்தின் மற்றொரு பெயர் அது.
8) இயேசுவினுடைய முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருகையைக்குறித்த உண்மைகள்: (3)
( ) முதலாவது வருகை குழந்கையாக பெத்லகேமில் வந்தது.
( ) நோவாவின் காலத்தில் முதல் வருகை இருந்தது.
( ) இரண்டாம் வருகை மார்டின் லுத்தருடைய நாட்களில் இருந்தது.
( ) இரண்டாம் வருகை ஆயிரம் வருட துவக்கத்தில் இருக்கும்.
( ) மூன்றாம் வருகை ஆயிரம் வருட முடிவில் இருக்கும்.
( ) புதிய பூமி சிருஷ்டிக்கப்பட்டபின்னர் மூன்றாவது வருகை இருக்கும்.
9) துன்மார்க்கர் அக்கினியில் அழிவது இரண்டாவது மரணம். (1)
( ) சரி.
( ) தவறு.
10) இயேசு எனக்காக பரலோகில் ஆயத்தம்பண்ணும் அந்த அற்புதமான வீட்டில் வசிக்க விரும்புகிறேன்.
( ) ஆம்.
( ) இல்லை.





